விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் 70 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் ஏற்படவில்லை.
இடையில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டமும் நடத்தினர்.
முடிவுக்கு வரும்
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் இவ்வாறு தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த பிரச்சினையில் விரைவில் முட்டுக்கட்டை நீங்கி போராட்டம் முடிவுக்கு வரும் என மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இது தொடர்பாக கூறியதாவது:-
மத்திய அரசு தயார்
விவசாயிகள் போராட்டம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே நடக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக இருக்கிறது. இந்த பிரச்சினையில் உள்ள முட்டுக்கட்டையை விரைவில் உடைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
விவசாயிகள் பிரச்சினை குறித்து பேச காங்கிரசுக்கு எந்த உரிமையும் இல்லை. ஆட்சியில் இருந்தபோது விவசாயிகளுக்கு காங்கிரஸ் கட்சி ஏன் எதுவும் செய்யவில்லை? கடந்த 2019-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் இத்தகைய சீர்திருத்தங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் தற்போது அந்த கட்சி பல்டி அடித்துள்ளது. விவசாயிகள் பிரச்சினையில் அரசியல் செய்து காங்கிரசால் வெற்றி பெற முடியாது.
இவ்வாறு தோமர் கூறினார்.
திக்விஜய் சிங் கருத்துக்கு பதில்
வேளாண்மை பற்றி தோமருக்கு எதுவும் தெரியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியிருப்பது குறித்து தோமரிடம் கேட்டபோது, அவரை (திக்விஜய் சிங்) தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். காங்கிரஸ் கட்சி கூட அவரை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்று பதில் அளித்தார்.