புதுடெல்லி,
தி.மு.க. பொருளாளரும், தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, விமான டிக்கெட் ரத்து கட்டணத்தைச் சீரமைக்க மத்திய அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? என்றும், ரத்து கட்டணம் 50 சதவீதத்துக்கு குறைவாக இருக்கவும், எரிபொருளுக்கான கூடுதல் வரி பயணிகளுக்கு திரும்பக் கிடைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதா?' என்றும் மக்களவையில் கேள்வி எழுப்பினார்.
அதற்கு விமானத்துறை இணை மந்திரி ஹர்தீப்சிங் பூரி அளித்த பதில் வருமாறு:-
விமான டிக்கெட் ரத்து கட்டணத்தின் அளவு டிக்கெட் வாங்குவதற்கு முன்பாகவே அறிவிக்கப்படவும், பயனாளிகள் மேம்பாட்டுக் கட்டணம், விமான நிலைய மேம்பாட்டுக் கட்டணம் மற்றும் இதர சேவைக் கட்டணங்களை பயணிகளுக்கு திருப்பித்தரவும், விமானத்துறை இயக்குனரகத்தின் விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
விமான டிக்கெட் ரத்து கட்டணத்தின் அளவு, அடிப்படைக் கட்டணம் மற்றும் எரிபொருளுக்கான கூடுதல் வரியை விட அதிகரிக்காமல் இருக்கவும் விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. டிக்கெட் முகவர்கள் தங்களது சேவைக் கட்டணத்தை டிக்கெட் வாங்குவதற்கு முன்பாகவே அறிவிக்க வேண்டும் என விமானத் துறை இயக்குனரகம், அனைத்து விமான நிறுவனங்களுக்கும் தெளிவுபடுத்தி உள்ளது.
இவ்வாறு பதில் அளித்தார்.