தேசிய செய்திகள்

மத்திய மந்திரி ஜே.பி.நட்டா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

ஜே.பி.நட்டாவுக்கு கடந்த 17-ந்தேதி கரோனரி ஆஞ்சியோகிராபி எனப்படும் இதய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

புதுடெல்லி,

மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி. நட்டாவுக்கு கடந்த 13-ந்தேதி லேசான உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல்நல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

குறிப்பாக ஜே.பி.நட்டாவுக்கு கடந்த 17-ந்தேதி கரோனரி ஆஞ்சியோகிராபி எனப்படும் இதய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட தகவலின்படி, ஜே.பி.நட்டா நலமுடன் உள்ளார் எனவும், எய்ம்ஸ் இருதயவியல் துறை டாக்டர்கள் அவரது உடல்நலத்தை கண்காணித்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சிகிச்சை முடிந்து ஜே.பி.நட்டா இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைக்குப் பிறகு ஜே.பி.நட்டா இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் அவர் நலமுடன் இருந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்காக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.