திருப்பதி,
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கோடை விடுமுறை நிறைவடைய உள்ளது.கோடை விடுமுறைக்கு முன்பாக ஏழுமலையானை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் நேற்று முன்தினம் முதல் திருப்பதியில் குவியத் தொடங்கினர்.நேற்று அதிகாலை பூதேவி காம்ப்ளக்சில் வழங்கப்படும் நேர ஒதுக்கீடு சர்வ தரிசன டிக்கெட்டை பெற பக்தர்கள் முண்டியடித்துச் சென்றனர். இதனால் பக்தர்களிடையே தள்ளுமுள்ளு, மோதல் ஏற்பட்டது. தள்ளுமுள்ளுவில் சிக்கிய முதியவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் மற்றும் நாராயணகிரி அறைகள் முழுவதும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர். இதனால் தரிசன வரிசையில் இருந்து கோகர்பம் அணை வட்டச் சாலை ஆக்டோபஸ் வரை 5 கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர்.திருப்பதி மலை முழுவதும் பக்தர்களின் கூட்டம் காணப்படுகிறது. நேற்று பிற்பகலுக்குப் பிறகு தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது. தரிசனத்திற்கு வாகனங்களில் வந்த பக்தர்களின் வாகனங்கள் அலிபிரி சோதனைச் சாவடியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. இதனால் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் பக்தர்கள் நீண்ட நேரம் தங்களது வாகனங்களிலேயே காத்திருந்து சிரமம் அடைந்தனர்.
பக்தர்களுக்கு தங்கும் அறைகள் கிடைக்காததால் பூங்கா, திறந்தவெளி மற்றும் மண்டபங்களில் தங்கி உள்ளனர். தரிசனத்திற்கு வந்த பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் டீ, காபி, பால், குடிநீர், உணவு உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர். நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் தரிசனத்திற்கு வருபவர்கள் தங்களது தரிசனத்தை சிறிது நாட்கள் தள்ளி வைக்க வேண்டுமென தேவஸ்தான அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.