தேசிய செய்திகள்

உ.பி.: கரடி வேஷத்துடன் வெயிலில் நிற்கும் விவசாயிகள்; எல்லாம் இந்த தொல்லையால்தான்...

எங்கள் பயிர்களை அவற்றிடம் இருந்து பாதுகாக்க இதுபோன்று கரடி வேஷம் போட்டு நிற்கிறோம் என கூறினார்.

சம்பல்

உத்தர பிரதேசத்தில் சம்பல் மாவட்டத்தில் பிரோஸ்பூர் கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள் தங்களுடைய பயிர்களை பாதுகாக்க நூதன முறையை கையாள்கின்றனர்.

அவர்கள் பகலில் கரடி வேஷத்தில் பயிர்களின் நடுவில் நிற்கின்றனர். பகல் பொழுதில் வெயிலில் அந்த உடையுடன் நிற்பது பற்றி தரம்பிர் என்ற விவசாயியிடம் நிருபர்கள் பேசியபோது அவர், நாங்கள் உருளை கிழங்குகள் மற்றும் ஸ்டிராபெர்ரி பழங்களை பயிர் செய்கிறோம்.

அவற்றை உண்பதற்காக எங்களுடைய வயல்வெளிகளுக்கு குரங்குகள் வருகின்றன. தினமும் 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் அப்படி வந்து செல்கின்றன. இதற்கு ஏதேனும் ஒரு தீர்வு காண வேண்டும். அதனால், நாங்கள் அவற்றிடம் இருந்து எங்கள் பயிர்களை பாதுகாக்க இதுபோன்று கரடி வேஷம் போட்டு நிற்கிறோம் என கூறினார்.

இதுபோன்ற நூதன முடிவை பல விவசாயிகள் கையாண்டு வருகின்றனர் என்றும் அவர் கூறினார். இதுதொடர்பாக வன இலாகா அதிகாரி மனோஜ் குமார் கூறும்போது, இதுபற்றி முழுமையாக எனக்கு தெரியவில்லை.

அவற்றை விரட்டி விட்டால், அவை வேறிடத்திற்கு சென்று விடும். அதனால், இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்றார். அவற்றை பிடித்து, காட்டுக்குள் விடும் முயற்சியை வன துறை அதிகாரிகள் எடுப்பார்கள். எங்களுக்கு வரும் உத்தரவை தொடர்ந்து நாங்கள் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளார்.