கவுசாம்பி
உத்தர பிரதேசத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியான 11 பேருக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்து உள்ளார்.
உத்தர பிரதேசம் மாநிலத்தின் கவுசாம்பி மாவட்டத்தில் பிப்ரி பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் நேற்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால், ஆலையில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் அலறி ஓடினர்.
எனினும், இந்த விபத்தில் சிக்கி 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 15 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதுபற்றி தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும், இந்த சம்பவத்தில் 11 பேர் பலியாகி உள்ளனர்.
இதனை தொடர்ந்து காயமடைந்தவர்கள் பிரயாக்ராஜ் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். துணை முதல்-மந்திரி கே.பி. மவுரியா மருத்துவமனைக்கு நேரில் சென்று அவர்களை பார்வையிட்டதுடன், சிகிச்சை விவரம் பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்ததுடன், சிறந்த சிகிச்சை அளிக்கும்படி கேட்டு கொண்டார்.
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியான 11 பேருக்கு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர்களுக்கு நிவாரணமும் அறிவித்து உள்ளார். இதன்படி, பலியானவர்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட உள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.