தேசிய செய்திகள்

8 போலீசாரை சுட்டுக்கொன்ற வழக்கில் தேடப்பட்ட பிரபல ரவுடி விகாஸ் துபே கைது

உத்தர பிரதேச போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி விகாஸ் துபே மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் பிக்ரு கிராமத்தை சேர்ந்தவன் பிரபல ரவுடி விகாஸ் துபே. கடந்த 3-ந் தேதி நள்ளிரவு அவனை போலீசார் கைது செய்ய சென்றனர். அப்போது, அவனும், அவனுடைய கூட்டாளிகளும் நடத்திய தாக்குதலில் 8 போலீசார் பலியானார்கள்.

போலீஸ் துப்பாக்கி சூட்டில் விகாஸ் துபே கூட்டாளிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சம்பவத்தை தொடர்ந்து, விகாஸ் துபேவுக்கு நெருக்கமான 5 பேர் கைது செய்யப்பட்டனர். 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உள்ளூர் போலீசார் 68 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை கைது செய்ய போலீசார் திவீரமாக ஈடுபட்டுள்ளனர்.

விகாஸ் துபேவை கைது செய்யும்வகையில் துப்பு கொடுப்பவருக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதை ரூ.5 லட்சமாக உத்தரபிரதேச அரசு உயர்த்தி உள்ளது. இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் ரவுடி விகாஸ் துபே கைது செய்யப்பட்டுள்ளான்.