கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் பரிதாபம்: தியேட்டர் சுவர் இடிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் பலி

உத்தரபிரதேசத்தில் தியேட்டர் சுவர் இடிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.

அம்ரோஹா,

உத்தரபிரதேச மாநிலம், அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள சதர் கோட்வாலி பகுதியில் ஒரு தியேட்டரில் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று தொழிலாளர்கள் கட்டுமான வேலையில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக திடீரென தியேட்டரின் சுவர்களில் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இடிபாடுகளுக்குள் சிக்கிய 7 பேர் மீட்கப்பட்டனர்.

இதுபற்றி தகவல் தெரிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பலியானவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT