தேசிய செய்திகள்

உத்தர பிரதேசத்தில் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.வின் சகோதரர் கற்பழிப்பு வழக்கில் கைது

உத்தர பிரதேசத்தில் கற்பழிப்பு குற்றவாளியான பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.வின் சகோதரர் இன்று கைது செய்யப்பட்டு உள்ளார். #BJPMLA

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் குல்தீப் சிங் செங்கார். இவர் தனது சகோதரர்களுடன் சேர்ந்து தன்னை கற்பழித்து விட்டார் என 18 வயது இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், கடந்த 5ந்தேதி ஆயுத சட்டத்தின் கீழ் இளம்பெண்ணின் தந்தையான சுரேந்திரா சிங் என்ற பப்பு சிங் (வயது 50) போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பப்பு சிங்கை எம்.எல்.ஏ.வின் சகோதரரான அனில் சிங் அடித்து தாக்கியுள்ளார். அதன்பின் கைது செய்யப்பட்ட பப்பு சிங் கடந்த 8ந்தேதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு நேற்று அவர் உயிரிழந்து விட்டார்.

இதனை தொடர்ந்து பப்பு சிங்கின் மனைவி ஆஷா சிங் போலீசில் புகார் அளித்துள்ளார். சோனு, பாவுவா, வினீத் மற்றும் ஷைலு ஆகிய 4 பேர் பப்புவை அடித்தனர் என கடந்த 4ந்தேதி எப்.ஐ.ஆர். பதிவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதனால் அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தொடர்ந்து எம்.எல்.ஏ.வின் சகோதரரான அதுல் சிங் செங்காரையும் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.