தேசிய செய்திகள்

உ.பி.: தின்பண்டங்களை சாப்பிட்ட 3 சகோதரிகள் உயிரிழந்த சோகம்

உத்தர பிரதேசத்தில் தின்பண்டங்களை சாப்பிட்ட 3 சகோதரிகள் உயிரிழந்த சோகம் ஏற்பட்டு உள்ளது.

ரேபரேலி,

உத்தர பிரதேசத்தில் ரேபரேலி மாவட்டத்தில் உஞ்சஹார் பகுதியில் மிர்சா இனயதுல்லாபூர் பட்டி கிராமத்தில் நவீன் குமார் சிங் என்பவர் வசித்து வந்துள்ளார்.

இவரது மகள்கள் வைஷ்ணவி (வயது 8), விதி (வயது 6) மற்றும் பிகு (வயது 4) ஆவர். இந்த நிலையில், ஜமுனாப்பூர் சந்தையில் அரிசி பொரி உள்பட சில தின்பண்டங்களை வாங்கியுள்ளார். அவற்றை அவரது 3 மகள்களும் சாப்பிட்டு உள்ளனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் வாந்தி எடுத்துள்ளனர். உடனடியாக அவர்களை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், வைஷ்ணவி வழியிலேயே உயிரிழந்து உள்ளார். சிகிச்சை பலனின்றி மற்ற 2 சகோதரிகளும் உயிரிழந்து உள்ளனர்.

சிறுமிகளின் பிரேத பரிசோதனையில் மரணத்திற்கான காரணம் எதுவும் தெரிய வரவில்லை. இதுபற்றி ஆய்வு செய்ய கிராமத்திற்கு மருத்துவ குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. தின்பண்டங்களை சாப்பிட்ட சிறுமிகளான 3 சகோதரிகள் அடுத்தடுத்து, உயிரிழந்தது கிராமத்தினரிடையே பெருத்த சோகம் ஏற்படுத்தி உள்ளது.