புதுடெல்லி,
குறிப்பிட்ட அளவுக்கு மேல் பரிவர்த்தனை செய்யும் வர்த்தகர்களிடம் குறைந்த அளவிலேயே கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
2007-ம் ஆண்டு இயற்றப்பட்ட பணப்பரிவர்த்தனை மற்றும் தீர்வு முறை சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவின் மூலம் யு.பி.ஐ. மற்றும் பிற மின்னணு பணப்பரிவர்த்தனை முறைகளுக்கு கட்டணம் வசூலிக்க வங்கிகள் மற்றும் சேவை நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டு உள்ளது. 2016-ம் ஆண்டு முதல் யு.பி.ஐ. சேவை நுகர்வோருக்கு இலவசமாகவே வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் புதிய மசோதாவால் எந்தெந்த பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்? என்று யு.பி.ஐ. சேவைகளை பயன்படுத்துபவர்கள் குழப்பத் தில் இருந்தனர்.
இதையடுத்து யு.பி.ஐ. எனப்படும் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை முறை மூலம் மேற்கொள்ளப்படும் பணப்பரிமாற்றங்களுக்கு, நுகர்வோர் மற்றும் சிறு வியாபாரிகள் கட்டணம் செலுத்தவேண்டிய அவசியம் இல்லை என்று இந்திய பணம் செலுத்துதல் கவுன்சில் தெரிவித்துள்ளது.
மேலும், மளிகைக்கடைகள் உள்ளிட்ட சிறு வியாபாரிகளும் வணிகர் தள்ளுபடி கட்டணம் (எம்.டி.ஆர்.) இன்றி யு.பி.ஐ. மூலம் பணம் பெறலாம் என்று தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.
அதேசமயத்தில் பெரிய வியாபாரிகளுக்கு கட்டணம் விதிக்கப்பட்டாலும், நுகர்வோர் எவ்வித கட்டணத்தையும் செலுத்தவேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யு.பி.ஐ. கட்டமைப்பை உருவாக்க கடந்த 10 ஆண்டுகளாக வங்கிகள், நிதி நிறுவனங்கள், என்.பி.சி.ஐ. மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு, மோசடி தடுப்பு மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றில் அதிக முதலீடுகள் செய்துள்ளன.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை உள்கட்டமைப்பை தொடருவதற்கு முதலீடுகள் அவசியம் என்று பணம் செலுத்துதல் கவுன்சில் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறுகையில், 'டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான எம்.டி.ஆர். கட்டணம் வியாபாரிகளுக்கு மட்டுமே பொருந்தும், வாடிக்கையாளர்களுக்கு அல்ல. இந்த கட்டணம் வங்கிகள் மற்றும் நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பில் கூடுதல் முதலீடு செய்ய உதவும்.
தேசிய பணப்பரிவர்த்தனை கழகத்தின் (என்.பி.சி.ஐ.) கீழ் உள்ள யு.பி.ஐ. மற்றும் சேவைகள் வழிநடத்தல் குழு, எம்.டி.ஆர். கட்டணம் குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.
வரி மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா 2026 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னரே இது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.