நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பாதுகாப்பு படையினர் பலப்பிரயோகம் செய்ததாகவும் பெல்லட் குண்டுகளால் தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவ்காரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்துள்ளது. இது குறித்து விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மக்களவை நடவடிக்கைகள் முடங்கி வருகின்றன.
மழைக்கால கூட்டத்தொடரின் 9-வது நாளான இன்று அவை தொடங்கியதும், சபாநாயகர் ஓம் பிர்லா, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய நீளம் தாண்டுதல் வீரர் முரளி ஸ்ரீசங்கர் உள்ளிட்ட பதக்கம் வென்ற வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதன் பின்னர் கேள்வி நேரம் தொடங்கியவுடன், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பி அவையின் மையப்பகுதிக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனால் அவையில் கடும் அமளி நிலவியது. அமளி தொடர்ந்ததால் அவை நடவடிக்கைகளை சுமுகமாக நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதை அடுத்து, மக்களவையை சபாநாயகர் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார்.