கொல்கத்தா,
294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 27-ந்தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்த நிலையில், கடந்த 22-ந்தேதி 6-ம் கட்ட தேர்தல் முடிந்தது. இதன் மூலம் மொத்தம் 223 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்துள்ளது.
இதற்கிடையில், மேற்குவங்காளத்தின் மால்டா, கொல்கத்தா தெற்கு, முர்ஷிதாபாத், மேற்கு பர்தமான், தெற்கு தினாஜ்பூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு உள்பட்ட 34 தொகுதிகளுக்கு இன்று 7-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
முன்னதாக, 7-ம் கட்ட தேர்தலில் 36 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 2 தொகுதிகளில் (சம்ஜர்கஞ்ச், ஜங்கிப்பூர்) சஞ்சுக்தா மோச்சா கட்சி சார்பில் களமிறக்கப்பட்டிருந்த 2 வேட்பாளர்கள் மரணமடைந்ததையடுத்து அந்த தொகுதிகளுக்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. தள்ளிவைக்கப்பட்ட 2 தொகுதிகளுக்கும் மே 16-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 34 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மக்கள் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், மேற்குவங்காளத்தில் 7-ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மக்கள் தங்கள் உரிமையை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.