FILEPIC 
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியுடன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேச்சு

மேற்காசிய போர், ஹார்முஸ் நீரிணை நிலவரம் தொடர்பாக இருவரும் விவாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

ஈரான் மீது அமெரிக்கா -இஸ்ரேல் இணைந்து தொடங்கிய போர் ஒரு மாதத்தை நெருங்கி உள்ள நிலையில் திடீர் திருப்பமாக 5 நாள் சண்டை நிறுத்தத்தை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹார்முஸ் ஜலசந்தியை 48 மணி நேரத்தில் திறக்காவிட்டால் அந்நாட்டின் மின் நிலையங்களை தாக்கி அழிப்போம் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

இதனை நிராகரித்த ஈரான், தங்களது மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினால் வளைகுடா நாடுகளில் உள்ள மின் நிலையங்களை தாக்குவோம் என்று தெரிவித்தது.இதற்கிடையே ஈரானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடந்து வருவதால் ஈரானின் எரிசக்தி மற்றும் மின் நிலையங்கள் மீதான தாக்குதலை 5 நாட்கள் நிறுத்தி வைப்பதாக டிரம்ப் தெரிவித்தார். ஆனால் அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்று ஈரான் தெரிவித்தது. மேலும் தங்கள் மீதான அனைத்து தடைகளும் நீக்கப்படும் வரை போர் தொடரும் என்று ஈரான் அறிவித்து உள்ளது.

இந்தநிலையில், ஈரான் போருக்கு பின் முதல் முறையாக பிரதமர் மோடியுடன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொலைபேசி மூலம் கலந்துரையாடியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹார்முஸ் நீரிணையை தடையின்றி திறப்பதன் அவசியம் கப்பல்களின் பாதுகாப்பு குறித்தும் இருவரும் ஆலோசனை மேற்கொண்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேற்காசிய போர், ஹார்முஸ் நீரிணை நிலவரம் தொடர்பாக இருவரும் விவாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் ஈரான் அதிபர் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேசியிருந்த நிலையில் டிரம்ப் பேசி உள்ளது உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.