தேசிய செய்திகள்

ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் வைகோ ஆவேச பேச்சு: ‘எச்சரிக்கை விடுக்காதீர்கள்’ என வெங்கையாநாயுடு அறிவுறுத்தல்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் தஞ்சை மண்டலம் பாலை நிலமாக மாறி விடும் என்று மாநிலங்களவையில் ஆவேசமாக பேசிய வைகோவுக்கு, ‘எச்சரிக்கை விடுக்காதீர்கள்’ என வெங்கையாநாயுடு அறிவுறுத்தினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மாநிலங்களவையில் நேற்று நேரமில்லா நேரத்தில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:-

தமிழ்நாட்டின் காவிரி பாசன பரப்பை, விளைநிலங்களை முற்றிலும் அழிக்கக்கூடிய பெருங்கேடான, மீத்தேன், ஷேல் கேஸ் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் எரிகாற்றுக்கிணறுகள் தோண்டும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த முனைகின்றது. நரேந்திரமோடி தலைமையிலான அரசு, இத்தகைய அழிவுத் திட்டத்தை செயல்படுத்துவதில் மிகவும் தீவிரமாக இருக்கின்றது.

ஒவ்வொரு கிணறும் 10,000 அடி ஆழத்திற்கு தோண்டப்போகின்றார்கள். ஏற்கனவே தூத்துக்குடியை சீரழித்த ஸ்டெர்லைட் உரிமையாளர்கள் வேதாந்தா நிறுவனம், காவிரி பாசனப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட 276 இடங்களில் உரிமம் வழங்கி இருக்கின்றார்கள். ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு 67 கிணறுகள் தோண்ட உரிமம் வழங்கப்பட்டு இருக்கின்றது. அதில் அவர்கள் தற்போது இரண்டு கிணறுகளை தோண்டிக் கொண்டு இருக்கின்றார்கள்.

கடந்த 17-ந்தேதி தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர், திருவாரூர் மாவட்டம் நன்னிலம், நாகப்பட்டினம் மாவட்டம் மாதானம், கடலூர் மாவட்டம் புவனகிரி ஆகிய இடங்களில் கிணறுகள் தோண்ட உரிமம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த கிணறுகளை தோண்டுவதற்காக அவர்கள் 20 மில்லியன் லிட்டர் தண்ணீரை அதிக அழுத்தத்தில் நிலத்திற்குள் உட்செலுத்தப் போகின்றார்கள். அதுமட்டும் அல்ல, அத்துடன் 636 நச்சு வேதிப்பொருட்களையும் கலந்து நிலத்திற்குள் செலுத்தப்போகின்றார்கள்.

இதனால் அந்த பகுதியில் உள்ள ஒட்டு மொத்த பாசன நிலப்பரப்பும் சீரழிந்து விடும். மேற்கொண்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும். எந்த எதிர்ப்பை பற்றியும் கவலை இல்லை என்று மந்திரி தர்மேந்திரபிரதான் கூறி இருக்கின்றார். ஹைட்ரோ கார்பன் திட்டங்களை உறுதியாக செயல்படுத்துவோம் என்று, கடந்த 17-ந்தேதி பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்து இருக்கின்றார்.

இந்த அழிவுத் திட்டங்களை எதிர்த்து லட்சக்கணக்கான விவசாயிகள், சாதி மத கட்சி எல்லைகளை கடந்து வீதிக்கு வந்து போராடி கொண்டு இருக்கின்றார்கள். கடந்த ஜூன் 23-ந்தேதி லட்சக்கணக்கான மக்கள் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் தொடங்கி, புதுச்சேரி மாநிலம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் வழியாக ராமேஸ்வரம் வரை 596 கிலோ மீட்டர் தொலைவிற்கு, கைகளை ஒன்றாகப் பிணைத்து மனிதச்சங்கிலி உருவாக்கி, அறப் போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டத்தில் நானும் பங்கேற்றேன்.

கடந்த மூன்று நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லிக்கு வந்து ஜந்தர்மந்தர் வீதிகளில் போராட்டம் நடத்தினார்கள். அவர்களுக்கு ஆதரவாக உத்தரபிரதேசத்தில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் பெருமளவில் திரண்டு வந்து பங்கேற்றார்கள்.

இந்த ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் மத்திய அரசுக்கு பல லட்சம் கோடி வருமானம் கிடைக்கும். உங்களுடைய கருவூலம் பொற்காசுகளால் நிரம்பி வழியும். ஆனால் அதேவேளையில், ஆசியாவின் நெற்களஞ்சியமான தஞ்சை மண்டலம் விவசாயத்திற்கு உதவாத பாலை நிலமாக மாறிவிடும். தமிழகம் மற்றொரு எத்தியோப்பியா ஆகிவிடும். தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறையினர் அகதிகளாக பிச்சைப்பாத்திரம் எந்தக் கூடிய நிலைமை உருவாகும். எனவே இந்தக் கேடான அழிவுத் திட்டங்களை கைவிடுமாறு மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கின்றேன். இல்லையேல், தமிழக மக்கள் மத்திய அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுவார்கள் என எச்சரிக்கின்றேன். இவ்வாறு வைகோ பேசினார்.

அப்போது மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு குறுக்கிட்டு, இந்த அவைக்கு நீங்கள் எச்சரிக்கையெல்லாம் விட வேண்டாம். வைகோ, நீங்கள் உச்ச வேகத்தில் பேசிவிட்டீர்கள். உங்களுடைய கருத்துகளை மட்டும் சொல்லுங்கள். எப்போது பேசினாலும், சொல்ல வேண்டிய கருத்துகளை மட்டும் சொல்லுங்கள் என்று அறிவுறுத்தினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்