தேசிய செய்திகள்

உத்தர பிரதேசம்: மரம் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து - 2 பேர் பலி

உத்தர பிரதேசத்தில் மரம் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த லாரி ஒன்று கான்பூருக்கு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியில் மரங்களை ஏற்றிக்கொண்டு நேற்று பைஸ்பூர் அருகே சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தால் லாரியில் இருந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு விபத்தில் சிக்கி உயிரிழந்த இருவரின் உடலையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் உயிரிழந்தவர்கள் டிரைவர் நரேந்திர பால் சிங் (48) மற்றும் உதவியாளர் ரிஷி குமார் (25) என அடையாளம் காணப்பட்டனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT