சென்னை,
கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக ஏற்பட்டுள்ள தொற்று பரவல் அதிகரிப்பால், அதனை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி அனைவரும் செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது. தடுப்பூசி பொறுத்த வரையில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்த தடுப்புசி போதாது என்ற நிலையில் தமிழக அரசு உலகளாவிய டெண்டர் கோரியுள்ளது.
இந்த சூழலில் தடுப்பூசி தயாரிப்பில் சில நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்திய அரசால் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் கடந்த 2012-ம் ஆண்டு துவங்கப்பட்டு தற்போது வரையில் செயல்படாமல் உள்ளது. இதனிடையே செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
இந்த சூழலில் செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தை தமிழகத்திற்கு ஒதுக்க வலியுறுத்துவதற்காக தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் டெல்லி சென்றனர். அங்கு மத்திய தொழில்துறை மந்திரி பியூஷ் கோயலை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனிடையே செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை குத்தகைக்கு தர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் தடுப்பூசி உற்பத்தி மையம் தொடக்குவது தொடர்பாக மத்திய அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்கும் என்று அமைச்சர்கள் டி.ஆர்.பாலு மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் தெரிவித்தனர்.