தேசிய செய்திகள்

வெனிசுலா நிலநடுக்கம்: பிரதமர் மோடி இரங்கல்; உதவிக்கரம் நீட்டிய இந்தியா

வெனிசுலா நாட்டுக்கு தேவையான சாத்தியப்பட்ட அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி

வெனிசுலாவில் ஏற்பட்ட இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் சிக்கி 700 பேர் காயமடைந்தனர்.

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ரிக்டர் அளவுகோலில் முதலில் 7.1, பின்னர் சில நிமிடங்களில் 7.5 என்ற அளவுகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால், மொரோன் நகரம், தலைநகரான காரகாஸ் நகரம் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டன. ஒரு நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. பலர் காயமடைந்தனர். இதனால், நாடு முழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.

வெனிசுலா பொறுப்பு ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது, நிலநடுக்க தாக்கங்களின் பாதிப்புகளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்றார். இன்று காலை வரை 32 பேர் பலியாகி உள்ளனர். 700 பேர் காயமடைந்தனர் என்றும் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டார்.

பிரதமர் மோடி இரங்கல்

நிலநடுக்க சம்பவத்திற்கு பிரதமர் மோடி இன்று வருத்தம் தெரிவித்து கொண்டார். அவர் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், வெனிசுலாவை கடுமையான நிலநடுக்கம் ஏற்படுத்திய பாதிப்பால் ஆழ்ந்த வேதனை அடைந்துள்ளேன். இந்திய மக்கள் சார்பாக, வெனிசுலா அரசு மற்றும் மக்களுக்கு, குறிப்பிடும்படியாக, சொந்தங்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த நிலநடுக்கத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வருவதற்காக இந்தியா இறைவனிடம் வேண்டி கொள்கிறது. வெனிசுலா நாட்டுக்கு தேவையான சாத்தியப்பட்ட அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என தெரிவித்து உள்ளார்.