சென்னை,
இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் அரசு முறை பயணமாக வருகிற 19 மற்றும் 20-ந்தேதிகளில் இலங்கைக்கு, தான் பொறுப்பேற்ற பின்னர் முதல் தடவை செல்கிறார். இலங்கைக்கு, இந்தியாவின் துணை ஜனாதிபதி 26 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது தான் செல்கிறார். இதற்கு முன்பு கடந்த 2000-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அப்போது துணை ஜனாதிபதியாக இருந்த கிரிஷன் காந்த், இலங்கையின் பெண் பிரதமராக இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் இறுதி சடங்கில் பங்கேற்க சென்றிருந்தார்.
சி.பி.ராதாகிருஷ்ணன் தனது பயணத்தின்போது இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே, பிரதமர் ஹரினி அமரசூரியா, நாடாளுமன்ற எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோரை சந்தித்து பேசுகிறார். இதேபோல இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகளையும் சந்தித்து பேச உள்ளார்.
தனது 2 நாள் பயணத்தின்போது எரிசக்தி, சமுதாய மேம்பாடு, பிராந்திய வளர்ச்சி, மீனவர் நலன் உள்பட பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கு இடையேயும் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 3 நாள் பயணமாக இலங்கைக்கு சென்றார். இதன் தொடர்ச்சியாக கடந்த அக்டோபர் மாதம் 3 நாள் பயணமாக இலங்கை பிரதமர் ஹரினி அமரசூரியா இந்தியா வந்தார். இருநாடுகளுக்கும் இடையே பரஸ்பரம் நல்லுறவு நீடித்து வந்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 4 நாள் பயணமாக அனுர குமார திசநாயகே இந்தியா வந்தார். அப்போது டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.