புது டெல்லி,
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, குஜராத் மக்களுக்குத் தனது மனமார்ந்த நன்றியினை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில் தெரிவித்திருப்பதாவது:-
“குஜராத்திற்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையிலான உறவு இப்போது மேலும் ஆழமாகவும், உடைக்க முடியாததாகவும் மாறியுள்ளது. மாநிலம் முழுவதும் நடைபெற்ற மாநகராட்சி, நகராட்சி, தாலுகா பஞ்சாயத்து மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தேர்தல்களில் பாஜக பெற்ற மகத்தான மக்கள் ஆதரவிற்கும், மக்கள் ஆணைக்கும் குஜராத் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாநில அரசின் மக்கள் நலன் சார்ந்த மற்றும் வளர்ச்சியை மையமாகக் கொண்ட பணிகளை அங்கீகரிப்பதன் மூலம், குஜராத் மக்கள் நல்லாட்சி அரசியலின் மீது மீண்டும் ஒருமுறை தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். பல ஆண்டுகளாக பாஜக மேற்கொண்ட அயராத முயற்சிகளுக்கு மக்கள் மனப்பூர்வமான ஆசீர்வாதங்களை வழங்கியுள்ளனர் என்பதை இந்த முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன.
வரும் காலங்களில், நாங்கள் இன்னும் அதிக அர்ப்பணிப்புடனும் ஈடுபாட்டுடனும் பணியாற்றுவோம் என்றும், மாநிலத்தை வளர்ச்சியின் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்ல தொடர்ந்து முயற்சிப்போம் என்றும் குஜராத் மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.