தேசிய செய்திகள்

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... வாடிக்கையாளர்களை கவர்ந்த 'தங்க கொழுக்கட்டை' - கிலோ ரூ.27 ஆயிரத்துக்கு விற்பனை

தங்க கொழுக்கட்டையில், 24 காரட் தூய்மையான தரம் கொண்ட சாப்பிடக்கூடிய தங்க முலாம் பயன்படுத்தப்படுகிறது.

நாசிக்,

விநாயகர் சதுர்த்தியையொட்டி, மராட்டிய மாநிலம் நாசிக்கில் விற்பனை செய்யப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

தங்க கொழுக்கட்டை

மராட்டிய மாநிலம் நாசிக்கில் உள்ள 'சாகர் ஸ்வீட்ஸ்' என்ற இனிப்பு கடையில் கடந்த 2021 முதல் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தங்க முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் 24 காரட் தூய சாப்பிடக்கூடிய தங்க முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை விற்பனை செய்யப்பட்டது.

கிலோ ரூ.27 ஆயிரம்

2021-ம் ஆண்டு இந்த கொழுக்கட்டை அறிமுகம் செய்யப்பட்டபோது, கிலோ ரூ.12 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து இருப்பதால், இந்த ஆண்டு கிலோ ரூ.27 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டாலும் இதன் தரம் மற்றும் தனித்துவமான தோற்றம் காரணமாக இந்த கொழுக்கட்டையை வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

முந்திரி, பாதாம், பிஸ்தா, பாலாடை கட்டி, குங்குமப்பூ, ஏலக்காய் துாள், நெய் உள்ளிட்ட பொருட்கள் சேர்த்து இந்த தங்க முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வகை கொழுக்கட்டையில், 24 காரட் தூய்மையான தரம் கொண்ட சாப்பிடக்கூடிய தங்க முலாம் பயன்படுத்தப்படுகிறது.

சாப்பிடக்கூடிய தங்கம்

சாப்பிடக்கூடிய தங்கம் என்பது, E 175 என்ற குறியீட்டின் கீழ், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவால் உணவு சேர்க்கைப் பொருளாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை தங்கமாகும். துாய்மையான தங்கம், மனித உடலின் செரிமான அமிலங்களுடன் எந்தவித வேதிவினையும் புரியாது. அது ரத்தத்தில் கலக்காமல், செரிமான மண்டலம் வழியாக அப்படியே கழிவாக வெளியேறும்.

நன்மைகள் இல்லை

இதை சாப்பிடுவதால் உடலுக்கு எந்த ஊட்டச்சத்து அல்லது சுகாதார நன்மைகளும் கிடைப்பதில்லை. இது, ஆடம்பரத்திற்காகவும், காட்சி அழகுக்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. உணவில் பயன்படுத்தப்படும் தங்கம், 23 முதல் 24 காரட் துாய்மை கொண்டதாக இருக்க வேண்டும். நகைகள் செய்யப் பயன்படுத்தப்படும் தங்கத்தில் செம்பு, நிக்கல் அல்லது துத்தநாகம் போன்ற பிற உலோகங்கள் கலந்திருக்கும் என்பதால், அதை உட்கொண்டால் கடுமையான நச்சுத்தன்மை ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT