புதுடெல்லி,
மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் புதிய விதிகளின்படி சமூக ஊடக நிறுவனங்கள் குறைதீர் அதிகாரியை நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த புதிய விதிகளை டுவிட்டர் நிறுவனம் பின்பற்றவில்லை என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி ரேகா பாலி விசாரித்து வருகிறார். நேற்று முன்தினம் நடைபெற்ற விசாரணையின்போது, இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, குறைதீர் அதிகாரி நியமிக்கப்படுவது தொடர்பாக ஜூலை 8-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் இல்லையென்றால் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டிவரும் என தெரிவித்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக டுவீட்டர் நிறுவனம் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் புதிய விதிகளின்படி குறைதீர் அதிகாரியை நியமிக்க எட்டு வாரம் அவகாசம் தேவை என தெரிவித்தது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் புதிய விதிகள் மீறப்பட்டால் டுவீட்டர் நிறுவனத்திற்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கலாம். டுவிட்டர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின் அசல் ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் அளிக்கப்படுகிறது என்று நீதிபதி தெரிவித்தார்.