தேசிய செய்திகள்

விஷூ பண்டிகை- சித்திரை மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. பங்குனி மாத பூஜை மற்றும் ஆறாட்டு விழாவையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மார்ச் 14-ந் தேதி திறக்கப்பட்டது.

19-ந் தேதி பங்குனி ஆறாட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் விழா கோலாகலமாக நடந்தது.. நிறைவாக 28-ந் தேதி ஆறாட்டுடன் விழா நிறைவடைந்தது. அன்று இரவு நடை சாத்தப்பட்டது.

இந்த நிலையில், விஷூ பண்டிகை, சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) வழக்கம் போல் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் நெய் அபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, கலசாபிஷேகம், சகஸ்ர கலச பூஜை, படி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. 14-ந் தேதி விஷூ பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுடன் கனி காணுதல் நடைபெறும். அன்று பக்தர்களுக்கு கை நீட்டமாக நாணயங்களை தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் வழங்குவார்கள். தொடர்ந்து 18-ந் தேதி வரை சித்திரை மாத சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்படும்.

கொரோனா காரணமாக சபரிமலையில் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ளது. சபரிமலை வெர்சுவல் க்யூவில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

11-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். அனைத்து பக்தர்களுக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பாசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. நெகட்டிவ் மருத்துவ பரிசோதனை சான்றிதழ்களுடன் வரும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

ரெயில்கள் மூலம் வரும் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக கோட்டயம், திருவல்லா, செங்கன்னூர், கொல்லம், கொட்டாரக்கரை, புனலூர் ஆகிய இடங்களில் இருந்து கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் சிறப்பு பஸ்கள் நிலக்கல் வரை இயக்கப்படும். பத்தனம்திட்டையில் இருந்து பக்தர்களின் தேவைக்கு ஏற்றவாறு பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்