தேசிய செய்திகள்

விழிஞ்ஞம் துறைமுகத்தில் சரக்கு ஏற்றுமதி - இறக்குமதி சேவை அடுத்த மாதம் தொடக்கம்

நேரடி ஏற்றுமதி, இறக்குமதி சேவையால் முதலீடு, வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தில், அடுத்த மாதம் 18ம் தேதி முதல் முழுமையான, சரக்கு ஏற்றுமதி - இறக்குமதி சேவை தொடங்கப்படுகிறது.

இதுவரை வெளிநாட்டு கப்பல்களில் வரும் சரக்குகளை மற்ற கப்பல்களுக்கு மாற்றி அனுப்பும் மையமாக செயல்பட்ட துறைமுகம், இனி நேரடியாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சரக்குகளையும் கையாள உள்ளது.

ஏற்றுமதி - இறக்குமதி சேவை

கேரள அரசு மற்றும் அதானி போர்ட்ஸ் இணைந்து உருவாக்கிய இத்துறைமுகம், இந்தியாவின் முதல் ஆழ்கடல் சரக்கு மாற்று துறைமுகமாகவும், தெற்காசியாவின் முதல் முழுமையான தானியங்கி சரக்கு பெட்டக துறைமுகமாகவும் உள்ளது. 18 மாதங்களில் 20 லட்சம் சரக்கு பெட்டகங் களை கையாண்டுள்ளது.

நேரடி ஏற்றுமதி, இறக்குமதி சேவையால் சரக்கு கையாளல் செலவு மற்றும் நேரம் குறைந்து, முதலீடு, வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து கேரள அரசு வெளியிட்ட அறிக்கையில்,

ஆகஸ்ட் 18ம் தேதி முதல் விழிஞ்ஞம் துறைமுகத்தில் நேரடி ஏற்றுமதி இறக்குமதி சேவையை முதல்-மந்திரி சதீசன் கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார்.

இதையொட்டி, கப்பல் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து நிறுவனங் கள் பங்கேற்கும் 'மிஷன் சமுத்ரா' வணிக மாநாடும் நடைபெறும்.

துறைமுகம், தொழிற்சாலைகள், உள்நாட்டு நீர்வழிகள், சரக்கு போக்குவரத்து வசதிகள், சாலை மற்றும் ரயில் இணைப்புகளை ஒருங்கிணைத்து, கேரளாவை முக்கிய கடல்சார் வணிக மையமாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம். அனைத்து கப்பல் நிறுவனங்களும் விழிஞ்ஞம் துறைமுகத்தை பயன்படுத்தும் வசதி தொடரும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.