பெங்களூரு,
கர்நாடகத்தில் 3 நாடாளுமன்ற தொகுதிகள், 2 சட்ட சபை தொகுதிகள் என 5 தொகுதிகள் காலியாக உள்ளன. அதாவது சிவமொக்கா, பல்லாரி, மண்டியா ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளும், ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளும் உறுப் பினர் இல்லாமல் உள்ளனர் இந்த 5 தொகுதிகளுக்கும் நவம்பர் 3-ந் தேதி (அதாவதுஇன்று) இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. பல்லாரி, ஜமகண்டி ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரசும், மண்டியா, சிவமொக்கா, ராமநகர் ஆகிய 3 தொகுதிகளில் ஜனதா தளம்(எஸ்) கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.பா.ஜனதா சார்பில் 5 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இடைத்தேர்தல் களத்தில் மொத்தம் 31 வேட்பாளர்கள் உள்ளனர்.
மண்டியா உள்பட 5 தொகுதிகளில் இன்று(சனிக்கிழமை) இடைத்தேர்தல் துவங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலுக்காக 5 தொகுதிகளிலும் மொத்தம் 6,453 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 57 வாக்குச்சாவடிகள் பிங்க் எனப்படும் இளஞ்சிவப்பு வாக்குச்சாவடிகள் ஆகும். அவற்றில் பெண் ஊழியர்கள் மட்டுமே பணியாற்ற உள்ளனர்.
இந்த இடைத்தேர்தலில் 54 லட்சத்து 54 ஆயிரத்து 275 வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதி படைத்தவர்கள் ஆவார்கள். இதில் ஆண் வாக்காளர்கள் 27 லட்சத்து 21 ஆயிரத்து 85 பேரும், பெண் வாக்காளர்கள் 27 லட்சத்து 30 ஆயிரத்து 949 பேரும், பிற வாக்காளர்கள் 462 பேரும், தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்காளர்கள் 1,779 பேரும் உள்ளனர். இதையொட்டி 5 தொகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.