புதுடெல்லி,
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் மேப்பாடி அருகே வயநாடு-கல்லாடி சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த பகுதியில், 22.6 செ.மீ. அளவுக்கு அதிகனமழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக நிலச்சரிவு ஏற்பட்டது. சுரங்கப்பணிக்காக தோண்டப்பட்ட மண் சரிந்து குவிந்துள்ளது. ஒரு வீடும். தேவாலயமும் முழுமையாக சேதமடைந்து உள்ளன. அப்பகுதியில் இருந்த பேருந்து நிறுத்தமும், பாலமும் மண்ணுக்குள் புதைந்துவிட்டன. நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகி உள்ளனர். இது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுச் செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். பாதிக்கப்பட்ட அனைவருடனும் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. நிவாரண மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பாதிக்கப்பட்டவர்களை சென்றடைய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.