கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் நாளை காலை 6 மணி முதல் வருகிற 30ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியாகி உள்ள செய்திகுறிப்பில், அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டு இருக்கும். அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கும். அத்தியாவசிய அவசர சேவைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஷாப்பிங் வளாகங்கள், உணவகங்கள், ஜிம்கள், நீச்சல் குளங்கள் மூடப்பட்டிருக்கும். சில்லறை கடைகள் காலை 7 மணி முதல் 10 மணி வரை திறந்திருக்கும். பேக்கரி மற்றும் இறைச்சி கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். மருத்துவம் சார்ந்த கடைகள் வழக்கம் போல திறந்திருக்கும்.
பூங்காக்கள் மற்றும் உயிரியல் பூங்காக்கள் மூடப்பட்டிருக்கும். மெட்ரோ சேவை நிறுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் ரெயில் மற்றும் பேருந்துகளில், அவசர மற்றும் அத்தியாவசிய சேவை ஊழியர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனியார் கார்கள் மற்றும் டாக்சிகள் அவசர அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ சேவை, அவசரகால சேவைகளில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.
அனைத்து அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார மத கூட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் மற்றும் மருத்துவ பேக்கேஜிங் சேவைகள் தவிர, அனைத்து தொழில் மற்றும் உற்பத்தி பிரிவுகள் மூடப்பட்டிருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கில் மதுபான கடைகள் அனைத்தும் நகரின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என மாநில தலைமை செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஊரடங்கை முன்னிட்டு மதுபானங்களை வாங்கி வைத்து கொள்வதற்காக கடைகளின் முன் ஆண், பெண் பேதமின்றி மக்கள் பெருமளவில் வரிசையில் வந்து குவிந்தனர்.