தேசிய செய்திகள்

காவிரி நீரை திறந்துவிடும் நிலையில் நாங்கள் இல்லை: கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி

தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடும் நிலை யில் கர்நாடகம் இல்லை என்று நீர்ப்பாசனத்துறை மந்திரி ராமலிங்கரெட்டி கூறினார்.

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கும்படி கர்நாடகத்துக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. இதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மழை பற்றாக்குறையால் அணைகளில் தண்ணீர் இல்லாததால் தண்ணீரை திறக்க இயலாது என்று கர்நாடக அரசு ஏற்கனவே கூறியுள்ளது.

ராமலிங்கரெட்டி

இந்த விவகாரம் தொடர்பாக மாநில நீர்ப்பாசனத்துறை மந்திரி ராமலிங்க ரெட்டி பெங்களூருவில் நேற்று தனது துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவை எதிர்த்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மேல்முறையீடு செய்ய தீர்மானம்

இந்த ஆலோசனைக்கு பிறகு மந்திரி ராமலிங்கரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்துக்கு காவிரியில் 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறக்கும்படி காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அமல்படுத்துவது எங்களுக்கு கடினம். இதுகு றித்து காவிரி நீர் நிர்வாக ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய தீர்மானித்து உள்ளோம்.

கர்நாடகம் இல்லை

இதற்கான வரைவு அறிக்கையை அரசின் ஆலோசகர் வழங்கியுள்ளார். இதை நாங்கள் டெல்லியில் உள்ள வக்கீல் மோகன் காதரகிக்கு அனுப்பி வைக்க உள்ளோம். அதன் பிறகு இன்றே (நேற்று) மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும். எங்கள் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் இந்த மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடும் நிலையில் கர்நாடகம் இல்லை. ஒரு வேளை எங்களின் மேல்முறையீட்டை அந்த ஆணையம் ஏற்காவிட்டால் நாங்கள் அதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.