புதுடெல்லி,
டெல்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில், ‘சாட் ஜி.பி.டி.’-ஐ உருவாக்கிய ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் கலந்து கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது;-
“செயற்கை நுண்ணறிவின் அடுத்த கட்டமாக கருதப்படும் ‘சூப்பர் நுண்ணறிவு’, அடுத்த சில ஆண்டுகளில் அதன் ஆரம்ப கட்டத்தை அடையக்கூடும். இதற்கு நாம் தயாராகி வரும் சூழலில், செயற்கை நுண்ணறிவு ஜனநாயகமயமாக்கப்பட வேண்டும் என நாங்கள் நம்புகிறோம். அது அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும்.
அதுவே பாதுகாப்பான, முன்னோக்கிய பாதையாகும். செயற்கை நுண்ணறிவை ஜனநாயகமயமாக்குவதே மனிதகுலம் செழிப்பதற்கான சிறந்த வழி. நான் கடந்த ஆண்டு இந்தியாவிற்கு வந்திருந்தேன். தற்போது செயற்கை நுண்ணறிவு துறையில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி ஆச்சரியமளிக்கிறது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.