புனே
மராட்டியத்தில் காதலருடன் இணைந்து தொழிலதிபரை பள்ளத்தாக்கில் தள்ளி வருங்கால மனைவி கொன்ற அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்துள்ளது.
மராட்டியத்தின் புனே நகரில் ககுன்ஜே பகுதியை சேர்ந்தவர் கேதன் விஷால் அகர்வால் (வயது 26). தொழிலதிபரான அவர், ரியல் எஸ்டேட் நிறுவன இயக்குநராகவும் செயல்பட்டு வருகிறார். மலையேற்ற வீரரான இவர், கடந்த 18-ந்தேதி புனே நகரில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த லோஹாகத் கோட்டை பகுதியில் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தபோது, திடீரென 400 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து பலியானார்.
விஷாலுக்கு வருகிற நவம்பரில் சியாவுடன் திருமணம் நடைபெற முடிவாகி உள்ளது. ராஜஸ்தானின் உதய்பூர் நகரில் உள்ள அரண்மனையில் திருமணம் நடத்த ஏற்பாடாகி இருந்தது. இந்த சூழலில், சியாவின் பிறந்த நாள் விரைவில் வர இருந்தது. அதனை கொண்டாட சியாவும், அவருடைய 2 நண்பர்களும் கோட்டை மீது சென்றுள்ளனர்.
அவர்களுடன் விஷாலும் சென்றுள்ளார். அப்போது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. இது தற்செயலாக நடந்த விபத்து என அப்போது கூறப்பட்டது. ஆனால், போலீசாரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதுபற்றி போலீசார் கூறும்போது, இந்த விவகாரத்தில் வருங்கால மனைவி சியா மற்றும் அவருடைய காதலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சியாவும், அவருடைய காதலரும் சேர்ந்து அவரை உள்நோக்கத்துடன் பள்ளத்தாக்கில் தள்ளி விட்டுள்ளனர். இதனை கொலை வழக்காக விசாரித்து வருகிறோம் என்று கூறினர்.