புதுடெல்லி
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. ஈரானும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், மேற்காசியாவில் தொடர்ந்து பதற்ற நிலை நீடித்து வருகிறது. இந்த விவகாரம் பற்றி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை தொடர்பு கொண்டு, பிரதமர் மோடி இன்று பேசினார்.
அப்போது, ஹார்மூஸ் ஜலசந்தியை திறப்பது பற்றியும், கப்பல்களின் பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்பட வேண்டிய அவசியம் பற்றியும் டிரம்ப்பிடம் பிரதமர் மோடி பேசினார். இந்நிலையில் பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகேவுடன் மேற்காசிய மோதல் தொடர்பாக தொலைபேசி வழியே இன்று பேசினார்.
இதுபற்றி எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்ட செய்தியில், மேற்காசியாவில் காணப்படும் சூழல் பற்றி இருவரும் ஆலோசித்தோம். உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பில் பாதிப்பு ஏற்பட கூடிய இடையூறுகளை பற்றி முக்கிய கவனம் செலுத்தி விவாதிக்கப்பட்டது.
இந்தியா மற்றும் இலங்கையின் எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் மற்றும் மண்டல பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் அது தொடர்பாக, முக்கிய வளர்ச்சிக்கான திட்ட விசயங்களை மறுஆய்வு செய்தோம்.
நெருங்கிய மற்றும் நம்பிக்கைக்குரிய நாடுகள் என்ற அடிப்படையில், பகிரப்பட்ட சவால்களை எதிர்கொள்வது தொடர்பாக நெருங்கி பணியாற்றுவதில் நம்முடைய உள்ளார்ந்த ஈடுபாட்டை நாங்கள் இருவரும் மீண்டும் உறுதிப்படுத்தி கொண்டோம் என தெரிவித்து உள்ளார்.