கொல்கத்தா,
294 இடங்களை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு வரும் 27ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 29ந்தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் மேற்கு வங்காள முதல் மந்திரியான மம்தா பானர்ஜி தனது கட்சி போட்டியிடுகிற 291 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை கொல்கத்தாவில் வெளியிட்டார். அவர் இந்த முறை தனது பவானிபூர் தொகுதியில் களம் இறங்கவில்லை. அதற்கு பதிலாக அவர் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் பார்த்தா சட்டோபாத்யாய், அமித் மித்ரா ஆகிய 2 மந்திரிகள் உள்ளிட்ட 20 எம்.எல்.ஏ.களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 80 வயது கடந்தவர்களுக்கும் வாய்ப்பு இல்லை.
வேட்பாளர் பட்டியலில் 50 பெண்கள், 42 முஸ்லிம்கள், 79 தாழ்த்தப்பட்ட இனத்தவர், 17 பழங்குடியினர் ஆகியோருக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி 3 இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி உள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட காயத்தினால் முதலில் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் ரத்து செய்யப்பட்டது. அதன்பின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை கொல்கத்தாவில் வருகிற 21ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிடுவார் என அக்கட்சியின் தேசிய பொது செயலாளர் கைலாஷ் விஜய்வர்க்கியா கடந்த 2 தினங்களுக்கு முன் கூறினார்.
இந்நிலையில், மேற்கு வங்காள சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.க. தேர்தல் அறிக்கை இன்று மாலை 5.30 மணியளவில் வெளியிடப்படப்படும் என அறிவிப்பு வெளியானது. இதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் புர்பா மேதினிப்பூரில் எக்ரா பகுதியில் பேரணி ஒன்று நடைபெறுகிறது. அதில் அமித்ஷா பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். உடன் கைலாஷ் விஜய்வர்க்கியாவும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதன்பின் பேசிய அமித்ஷா, இது தேர்தல் அறிக்கை மட்டுமல்ல. நாட்டின் பெரிய கட்சியின் மேற்கு வங்காளத்திற்கான தீர்மான கடிதம் என்று கூறியுள்ளார்.