தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம்: தேசியக் கொடியை அவமதித்ததாக பாஜக வேட்பாளர் மீது புகார்

மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று ஓய்கிறது.

கொல்கத்தா,

திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்காளத்தில் சட்ட சபை தேர்தல் நடந்து வருகிறது. மாநிலத்தில் மொத்தமுள்ள 294 இடங்களுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த 23-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதில் 93.2 சதவீத வாக்குகள் பதிவானது.

முதல்கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், 2-வது மற்றும் இறுதிக்கட்டமாக மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. கோடை வெயிலை விட அதிகமாக அனல் வீசும் இந்த பிரசாரம் இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதனால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தின்போது தேசியக் கொடியை அவமதித்ததாக பாஜக வேட்பாளர் பாபியா அதிகாரிக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. தேசிய கொடி பொறிக்கப்பட்ட துப்பட்டாவை வைத்து பாபியா முகம் துடைத்ததை குறிப்பிட்டு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.