தேசிய செய்திகள்

ஜனாதிபதியை சந்தித்து வாழ்த்து பெற்றார் ஆர்.என். ரவி

புது டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை மேற்கு வங்காளத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என். ரவி சந்தித்து பேசினார்.

புது டெல்லி,

தமிழக கவர்னராக இருந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்காள மாநில கவர்னராக மாற்றப்பட்டார். ஆர்.என்.ரவி மாற்றப்பட்ட நிலையில், கேரளாவின் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், மேற்கு வங்காளத்தின் 22-வது கவர்னராக ஆர்.என்.ரவி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு நிதிபதி சுஜோய் பால் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அம்மாநில கவர்னராக இருந்த ஆனந்த போஸ் பதவி விலகிய நிலையில் ரவி மேற்கு வங்காளத்திற்கு மாற்றப்பட்டார்.

புதிய பொறுப்பை ஏற்ற பிறகு, ஜனாதிபதியை அவர் சந்தித்த முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பு இதுவாகும். மேற்கு வங்காளத்தில் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

ஜனாதிபதி அலுவலகம் தனது எக்ஸ் தளத்தில் இந்த சந்திப்பின் படத்தை பகிர்ந்துள்ளது.