புதுடெல்லி,
நலத்திட்ட உதவிகள், சலுகைகள் போன்றவற்றை பெறுவதற்கு ஆதார் எண்ணை பொதுமக்கள் இணைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயம் ஆக்கி உள்ளது. இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த இணைப்பினை டிசம்பர் 31-ந் தேதிக்குள் செய்து முடித்து விட வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்திருந்தது. ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடு அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
வங்கி கணக்குகளுடனும், செல்போன் எண்களுடனும் ஆதார் எண்களை இணைப்பதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
செல்போன் எண்களுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ள மம்தா பானர்ஜி தன்னுடைய செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கப்போவது கிடையாது என கூறிவிட்டார். இந்நிலையில் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் எண் இணைப்பை மத்திய அரசு கட்டாயம் ஆக்கி உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்காள மம்தா பானர்ஜி அரசு சுப்ரீம் கோர்ட்டு சென்று உள்ளது. மேற்கு வங்காள மாநில அரசின் மனுவை பிற வழக்குகளுடன் திங்கள் கிழமை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்கிறது.
தன்னுடைய செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மாட்டேன் என மம்தா பேசிய போது, என்னுடைய செல்போன் இணைப்பை வேண்டுமென்றால் துண்டிக்கட்டும். இது மத்திய அரசின் சதிதிட்டமாகும்.
என்னுடைய தொலைபேசி அழைப்புகளை பதிவிட முயற்சி செய்கிறார்கள் எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.