தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம்: ரூ.18,689 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளை துவக்கி வைத்த பிரதமர் மோடி

மேற்கு வங்காளத்தின் ரெயில்வே உள்கட்டமைப்பையும் விரைவாக விரிவுப்படுத்துவதற்கான முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என கூறினார்.

கொல்கத்தா

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ரூ.18,689 கோடி மதிப்பிலான முடிவுற்ற வளர்ச்சி பணிகளை துவக்கி வைத்தும், சில வளர்ச்சி பணிகள் துவக்கத்திற்கான அடிக்கல்லும் நாட்டினார்.

இதன்பின்னர் அவர் கூட்டத்தினரின் முன் உரையாற்றினார். அவர் பேசும்போது, இந்த திட்டங்கள் அனைத்தும் மேற்கு வங்காளத்திற்கும் மற்றும் கிழக்கு இந்தியாவுக்கும் உத்வேகம் அளிக்கும். இதனால், வர்த்தகம் மற்றும் தொழில் துறை ஊக்கமடையும் என கூறினார். நிறைவுற்ற, காரக்பூர்-மோரேகிராம் விரைவு சாலையானது மேற்கு வங்காளம் முழுவதும் பொருளாதார நடவடிக்கையை ஊக்குவிக்கும் என்றும் கூறினார்.

இதனால், லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை எளிமையாகும். அவர்களுக்கான புதிய புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளும் திறக்கும் என்றார். தொடர்ந்து அவர், நாடு முழுவதும் ரெயில்வே துறையின் நவீன உள்கட்டமைப்புக்கான பணியை மேற்கொள்ளும் உறுதியுடன் அரசு உள்ளது.

இதன் ஒரு பகுதியாக, மேற்கு வங்காளத்தின் ரெயில்வே உள்கட்டமைப்பையும் விரைவாக விரிவுப்படுத்துவதற்கான முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என கூறினார்.

துறைமுகம் மற்றும் நீர்வழி போக்குவரத்து, கிழக்கு இந்தியாவில் வர்த்தகம் மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்கு முக்கியம் வாய்ந்தவை என குறிப்பிட்ட அவர், கொல்கத்தா மற்றும் ஹல்தியா துறைமுகங்கள் வர்த்தகத்திற்கான முக்கிய மையங்களாக உள்ளன என கூறினார். ஹல்தியா கப்பல் கட்டும் வளாகம் இயந்திரமயம் ஆக்கும் பணிகளும் கூட நடந்து வருகின்றன என்றும் அவர் கூறினார்.