தேசிய செய்திகள்

சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப்பின் ஜம்மு - காஷ்மீர், லடாக் பகுதிகளில் தற்போதைய நிலை என்ன? - ‘தந்தி டி.வி.’ ஆய்வு நிலவரம்

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதிகளின் தற்போதைய நிலை குறித்து தந்தி டி.வி. ஆய்வு நடத்தியது.

தினத்தந்தி

சென்னை,

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்து செய்யும் தீர்மானம் மற்றும் அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகை செய்யும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகியவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் காஷ்மீரில் பதற்றம் நிலவுகிறது. இணைய-தொலைபேசி சேவைகள் முடக்கப்பட்டு உள்ளன. ராணுவத்தினரின் பாதுகாப்பு வளையத்தில் ஜம்மு-காஷ்மீர் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு மாநிலம் முழுவதும் இடர்பாடுகள் இருந்தபோதிலும், அங்குள்ள தற்போதைய நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக தந்தி டி.வி. ஒரு சிறப்பு குழுவை அங்கு அனுப்பி வைத்தது. தந்தி டி.வி.யின் சிறப்பு செய்தியாளர் எஸ்.சலீம் தலைமையிலான இந்த குழுவினர் காஷ்மீர் மக்களை சந்தித்து கருத்து கேட்டு, செய்திகள் சேகரித்து தந்தி டி.வி.யில் ஒளிபரப்பி உள்ளனர்.

இந்த ஆய்வின்படி அங்குள்ள கள நிலவரம் வருமாறு:-

காஷ்மீரின் கள நிலவரங்களை ஆராய்வதற்காக விமானம் மூலம் லடாக் சென்ற நிலையில், அங்கிருந்து பிற பகுதிகளுக்கு செல்ல முடியவில்லை. ஏனென்றால் அங்கு வாகனங்கள் எதுவும் இயங்கவில்லை. அதேபோல விமானம் மூலம் ஸ்ரீநகர், ஜம்முக்கு செல்லலாம். ஆனால் அங்கிருந்து ஊருக்குள் செல்ல வாகனங்கள் எதுவும் கிடையாது.

லடாக்கில் தற்போது கடும் குளிர் நிலவவில்லை. சீதோஷ்ண நிலையும் இயல்பாகவே இருக்கிறது. இதனால் முதற்கட்டமாக லடாக் பகுதியில் சுற்றித்திரிந்து அங்குள்ள பலதரப்பு மக்களை சந்தித்து கருத்துகள் கேட்கப்பட்டது. அதேபோல காஷ்மீர், ஜம்மு மற்றும் கார்கிலில் இருந்து லடாக்குக்கு வரும் மக்களிடமும் கருத்துகள் பெறப்பட்டன.

அந்தவகையில் காஷ்மீர், ஜம்மு, லே-லடாக், கார்கில்-லடாக் என 4 பிரிவுகளாக பிரித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் காஷ்மீரில் துணை ராணுவத்தினர் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். அங்குள்ள மக்கள் பெரும்பாலும் அரசுக்கு எதிரான தங்களது ஆதரவையோ, எதிர்ப்புகளையோ வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலேயே அதிகம் பகிர்வார்கள் என்பதால், இணையதள சேவை முற்றிலும் முடக்கப்பட்டு இருக்கிறது.

எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒரு சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. இணையதள சேவை முடங்கியிருக்கிறது. வாகனங்கள் இயக்கப்படாததால் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல மக்கள் சிரமப்படுகிறார்கள். ஆனாலும் காஷ்மீருடன் ஒப்பிடுகையில், ஜம்முவில் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. அங்கு அமைதியே நிலவுகிறது.

லே லடாக் பகுதி மக்கள் வழக்கமான அலுவல்களில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அடுத்ததாக லே லடாக் பகுதி. லடாக்கின் தலைநகரம் போல செயல்படும் அதிமுக்கியமான பகுதி இந்த லே லடாக் ஆகும். இந்த பகுதியில் உள்ள மக்கள் மத்திய அரசின் நடவடிக்கையால் உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுகிறார்கள்.

லே லடாக்கில் மக்கள் நடமாட்டம் வழக்கம்போல காணப்படுகிறது. சாலையோரங்களில் காய்கறி-பழங்கள் விற்பனை நடக்கிறது. இயல்பு வாழ்க்கை அங்கு பாதிக்கப்படவில்லை.

லே லடாக் பகுதியில் சாலையோரம் காய்கறி-பழங்கள் விற்பனையில் பெண்கள் ஈடுபட்டிருந்தபோது எடுத்த படம்.

அதேநேரம் லடாக்கின் இன்னொரு பிரிவான கார்கில், இஸ்லாமியர்கள் அதிகம் நிறைந்த பகுதி என்பதால் அங்குள்ளவர்கள் இந்த நடவடிக்கை காரணமாக கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இதனால் அங்கு பெருமளவில் பதற்றம் நிலவுகிறது.

அவர்கள் மேலும் கூறும்போது, இது விவசாய பூமி அல்ல. சுற்றுலாதான் இங்கு பிரதானம். சுற்றுலா பயணிகளை நம்பியே எங்கள் வாழ்வாதாரம் இருக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என்று அறிவித்திருப்பதால், அங்குள்ள பயணிகள் வருகை வெகுவாக குறைந்திருக்கிறது. லடாக் பகுதி அதிக மலை உள்ள, பனிப்பொழிவான ரம்மியமான சுற்றுலாத்தலம் ஆகும். இங்கு வருவதற்கு சுற்றுலா பிரியர்கள் அதிகம் ஆசைப்படுவார்கள். எனவே மத்திய அரசின் இந்த முடிவு நிச்சயம் நம்பகத்தன்மையை கொடுக்கும். சுற்றுலா மேம்பட்டு, அதிக பயணிகள் இங்கு வருவார்கள். எங்கள் வாழ்க்கைத்தரம் உயரும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

ஜம்முவில் மக்கள் நடமாட்டம் இருக்கும் காட்சி.

லே லடாக் பகுதி புத்த மதத்தினர் அதிகம் நிறைந்திருக்கும் பகுதி என்பதால் அங்கு நிலைமை சீராக இருக்கிறது. மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இதனால் அங்கு வன்முறை மூளும் அபாயம் நேராது என்றே கருதப்படுகிறது. எல்லா வகையிலும் அரசின் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டிருப்பதால் தற்போது வரை எந்த வன்முறையோ, கலவரமோ ஏற்படவில்லை.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது