தேசிய செய்திகள்

கேரள புதிய முதல் மந்திரி யார்? காங்கிரஸ் கட்சிக்குள் நீடிக்கும் இழுபறி

கே.சி. வேணுகோபால், ரமேஷ் சென்னிதலா, சதீசன் ஆகியோரின் ஆதரவாளர்கள் கேரளத்தில் பதாகைகள் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இடதுசாரி கூட்டணி ஆட்சியை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 140 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் மட்டும் 63 தொகுதிகளில் தனிப்பெரும் வெற்றி பெற்றது.10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றினாலும், முதல்-மந்திரி யார்? என்பதை முடிவு செய்வதில் இழுபறி நிலவி வருகிறது. அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், கேரள எதிர்க்கட்சி தலைவர் வி.டி. சதீசன், மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோரிடையே முதல்-மந்திரி பதவியை பிடிப்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது.

புதிய முதல்-மந்திரியாக யாரை நியமிப்பது? என்பது குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரசின் மூத்த தலைவர்களான முகுல் வாஸ்னிக், அஜய் மக்கான் ஆகியோர் மேலிட பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் கேரளம் வந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடம் கருத்துக்களை கேட்டனர். பின்னர் டெல்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே, பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரிடம் கேரளத்தில் நிலவும் போட்டித்தன்மை குறித்து விளக்கினர்.

இதற்கிடையில் கே.சி. வேணுகோபால், ரமேஷ் சென்னிதலா, சதீசன் ஆகியோரின் ஆதரவாளர்கள் கேரளத்தில் பதாகைகள் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.இது தொடர்பாக கருத்து தெரிவித்த மூத்த காங்கிரஸ் தலைவர் முரளீதரன், “ஒரு தசாப்த காலத்திற்கு பிறகு கேரளத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த நிலையில் கட்சியின் ஒற்றுமை அவசியம்” என்றார். ஆனால் முதல்-மந்திரி பதவியை கைப்பற்றுவதில் அங்கு கடும் மோதல் நிலவி வருகிறது.இந்த நிலையில் டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் உயர்மட்ட கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, வி.டி. சதீசன், கே.சி. வேணுகோபால், ரமேஷ் சென்னிதலா மற்றும் கேரள காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால் இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.அதேநேரம் கட்சி மேலிடம் எடுக்கும் எந்த முடிவையும் ஏற்போம் என முதல்-மந்திரி பதவி போட்டியில் இருக்கும் 3 தலைவர்களும் தெரிவித்தனர்.

மேலும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பதாகைகள் வைப்பது உள்ளிட்ட எந்தவொரு போட்டி சார்ந்த நடவடிக்கைகளிலும் இருந்து தங்கள் ஆதரவாளர்கள் விலகி இருக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.இதனை தொடர்ந்து சோனியா காந்தியுடன் ஆலோசித்த பிறகு காங்கிரஸ் தலைமை, முதல்-அமைச்சர் யார்? என்பதை விரைவில் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கேசி வேணுகோபால் கேரள மதல் மந்திரியாக தேர்வு செய்யவே அதிகம் வாய்ப்புள்ளதாகவும் ஒரு பேச்சு எழுந்துள்ளது. ராகுல் காந்தி அவரது பெயரையே பரிந்துரைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கேரள காங்கிரசில் பரபரப்பாக பேசப்படுகிறது.