தேசிய செய்திகள்

மத வழிபாட்டு தலம் யாருக்கு சொந்தம்..? - இரு தரப்பினர் இடையே மோதல்

இரு தரப்பையும் சேர்ந்த 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் பிரமொதம் பகுதியில் ஜெயிண்ட் ஜான்ஸ் பெத்தலகேம் சர்ச் என்ற கிறிஸ்தவ மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த மத வழிபாட்டு தலம் யாருக்கும் சொந்தம் என்பதில் சிரியன் ஜகோபைட் என்ற தரப்பினருக்கும், மலன்கரா ஆர்த்தொடாக்ஸ் என்ற தரப்பினருக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இது தொடர்பாக இரு தரப்பும் கோர்ட்டில் வழக்குதொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இரு தரப்பு மோதல்

இந்நிலையில், ஜெயிண்ட் ஜான்ஸ் பெத்தலகேம் சர்ச் வழிபாட்டு தலத்திற்கு நேற்று மலன்கரா ஆர்த்தொடாக்ஸ் பிரிவினர் நேற்று வந்தனர். மேலும், கோர்ட்டு உத்தரவுபடி வழிபாட்டு தலம் தங்களுக்குதான் சொந்தம் என கூறினர்.

அப்போது அங்கு இருந்த சிரியன் ஜகோபைட் தரப்பினர் மற்றொரு உத்தரவை மேற்கொள்காட்டி வழிபாட்டு தலம் தங்களுக்குதான் சொந்தம் என கூறினார். இதனால் மத வழிபாட்டு தலத்திற்குள் வைத்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கினர். இதில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், மோதலில் ஈடுபட்ட இரு தரப்பையும் சேர்ந்த 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.