திருவனந்தபுரம்,
கேரளத்தில் நடந்து முடிந்த 140 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி 35 இடங்களையும் பா.ஜ.க. கூட்டணி 3 இடங்களையும் கைப்பற்றியது. இதனால் கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சி அமைக்கிறது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் முதல்-மந்திரி பதவிக்கு கடும் போட்டி இருக்கும் என்று தேர்தலுக்கு முன்பே எதிர்பார்க்கப்பட்டது. மூத்த தலைவரான ரமேஷ் சென்னிதலா, எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன், கே.சி. வேணுகோபால் எம்.பி. ஆகியோர் முதல்-மந்திரி பதவி மீது குறி வைத்து காத்து இருக்கின்றனர்.
இவர்களில் சட்ட மன்ற உறுப்பினர்களின் ஆதரவு எண்ணிக்கையை பொறுத்து கட்சி மேலிடம் முதல்-மந்திரியை தீர்மானிக்கும். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகும் எனக்கூறப்படுகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் மேலிட பார்வையாளர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் தோல்வியடைந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவராக வி.டி.சதீ சன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் எதிர்க்கட்சி தலைவர் ஆனபிறகு நடந்த 5 இடைத்தேர்தல்களில் 4 தொகுதிகளில் காங் கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது.
நாடாளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பின்னர் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இவை அனைத்தும் வி.டி.சதீசனுக்கு பலமாக உள்ள போதிலும் சமுதாய தலைவர்களுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருவது அவருக்கு பலவீனமாக உள்ளது.
கேரளத்தில் ரமேஷ் சென்னிதலா 26 வயதில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு 30 வயதில் மந்திரி ஆனவர். உள்துறை மந்திரியாக இருந்த இவர், 4 முறை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். காங்கிரஸ் கட்சியை உடைத்து கருணாகரன் புதிய கட்சியை தொடங்கியபோது மாநில தலைவராக பொறுப்பேற்று கட்சியை திறம்பட நடத்தியவர் என்ற பெயர் ரமேஷ் சென்னிதலாவுக்கு உண்டு. ஆனால் இவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்த காலகட்டத்தில் தான் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தது. இது இவருக்கு ஒரு பலவீனமாக உள்ளது.
முதல்-மந்திரி ரேசில் அடுத்த இடத்தில் உள்ள கே.சி.வேணுகோபால், சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்பட காங்கிரஸ் தலைவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். இது இவருக்கு ஒரு பலமாக உள்ள போதிலும் தற்போது எம்.பி.யாக உள்ள யாருக்கும் தேர்தலில் சீட் கொடுக்காத நிலையில் முதல்-மந்திரி பதவிக்கு தேர்ந்தெடுத்தால் காங்கிரஸ் கட்சியில் பெரும் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் கேரளத்தில் புதிய முதல்-மந்திரி வி.டி.சதீசனா? ரமேஷ் சென்னிதலாவா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.