தேசிய செய்திகள்

மூத்த குடிமக்களுக்கு மருத்துவத்தில் ஏன் இடஒதுக்கீடு இல்லை? 71 வயது முதியவர் வழக்கு

தனது தாயாரின் 52 ஆண்டுகால ஆசையை நிறைவேற்ற நீட் தேர்வுக்கு தயாராகும் அசோக் பஹார்.

லக்னோ,

மருத்துவ படிப்பில் மூத்த குடிமக்களுக்கு 1 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கக் கோரி, நீட் தேர்வுக்கு படித்து வரும் 71 வயது முதியவர் அசோக் பஹார் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

மருத்துவர்கள்

உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த அசோக் பஹார், பி.எஸ்சி, சட்டம் மற்றும் எம்பிஏ முடித்த முன்னாள் அரசு அதிகாரி ஆவார். இவரது தந்தை லக்னோவில் புகழ்பெற்ற மருத்துவர். இவரது மனைவி டாக்டர் மஞ்சுள் பஹார் ஓய்வு பெற்ற மகப்பேறு மருத்துவர் ஆவார்.

தாயின் ஆசை

இவரது குடும்பத்தில் பலர் மருத்துவர்களாக உள்ள நிலையில், தனது தாயாரின் 52 ஆண்டுகால ஆசையை நிறைவேற்ற, தற்போது மனைவியின் முழு ஆதரவோடுதான் இவர் பேரக்குழந்தைகள் வயதான மாணவர்களுடன் அமர்ந்து நீட் தேர்வுக்கு படித்துள்ளார்.

வயது வரம்பு இல்லை

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நீட் தேர்வு எழுத அதிகபட்ச வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளதால், தகுதியுள்ள மூத்த குடிமக்களும் மருத்துவக் கல்லூரிகளில் சேர நியாயமான வாய்ப்பளிக்க வேண்டும் என அவர் தனது மனுவில் கோரியுள்ளார். இந்த வழக்கின் விசாரணை விரைவில் வரவுள்ளது.

வயது ஒரு தடையல்ல

கல்வி கற்பதற்கும், கனவுகளை துரத்துவதற்கும் வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், 71 வயது முதியவர் ஒருவர் மருத்துவப் படிப்பில் மூத்த குடிமக்களுக்கு இடஒதுக்கீடு கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.