கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

மனைவி நடத்தையில் சந்தேகம்: நட்சத்திர ஓட்டலில் 2 குழந்தைகளை கொன்று கணவர் தற்கொலை முயற்சி

2 பெண் குழந்தைகளையும் ஓட்டலுக்கு அழைத்து வந்து, அங்கு வைத்து அவர்களை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில், 2 குழந்தைகளை கொன்று, தந்தை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.ஜி. இம்ரான் (40 வயது) என்பவர் பெங்களூருவில் உள்ள ஒரு 5 நட்சத்திர ஓட்டலில் நேற்று முன்தினம் அறை எடுத்து தனது 2 குழந்தைகளுடன் தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று மாலையில் அவரது அறையை சுத்தம் செய்வதற்காக பணியாளர்கள் சென்று கதவை தட்டினர். அப்போது யாரும் திறக்கவில்லை. இதையடுத்து அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, இம்ரானின் இரண்டு பெண் குழந்தைகளும் கட்டிலில் இறந்த நிலையில் கிடந்தனர்.

மேலும் உள்ளே இருந்த கழிவறையில் இம்ரான் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனடியாக பணியாளர்கள் அவரை மீட்டு மணிபால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், இம்ரானுக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனது 2 பெண் குழந்தைகளையும் ஓட்டலுக்கு அழைத்து வந்து, அங்கு வைத்து அவர்களை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

"என் குழந்தைகள் இப்படிப்பட்ட தாயுடன் வளர விரும்பவில்லை, அதனால் அவர்களை கொன்று தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன்" என்று இம்ரான் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.