தேசிய செய்திகள்

கணவனை 180 கி.மீ தோளில் சுமந்து சிவனை தரிசிக்க வைத்த மனைவி

ஹரித்வார் சென்று கங்கை நீரை சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்பது சச்சினின் நீண்ட நாள் ஆசையாக இருந்தது.

ஹரித்வார்,

அன்பு என்பது தன்னலமற்றது என்பதை உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒரு பெண் உலகிற்கு நிரூபித்து காட்டியுள்ளார். மாற்றுத்திறனாளி கணவனை 180 கிலோமீட்டர் தூரம் தனது தோளிலேயே சுமந்து வந்து, சிவன் கோவிலில் தரிசனம் செய்ய வைத்த அந்த பெண்ணின் பக்தி மற்றும் பாச போராட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகி, பார்ப்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விபத்தில் நேர்ந்த சோகம்

உத்தரப் பிரதேச மாநிலம் மோடிநகரில் உள்ள பக்ராவா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சச்சின் - ஆஷா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சச்சின், சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு கொடூர விபத்தில் சிக்கி, முதுகுத்தண்டு அறுவை சிகிச்சைக்குப் பின் நடக்க முடியாமல் முற்றிலும் முடங்கிப்போனார். ஆனாலும் சோர்ந்துவிடாத ஆஷா யாருடைய உதவியும் இன்றி, தனது குடும்பத்தை ஒற்றை ஆளாக நின்று காப்பாற்றினார்.

கணவனின் ஆசை

கணவர் சச்சின் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு, தொடர்ச்சியாக 13 முறை ஹரித்வார் வரை கால்நடையாகவே சென்று கங்கை நீர் எடுத்து வந்த தீவிர சிவபக்தர் ஆவார். ஹரித்வாரில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று புனித கங்கை நீரை அபிஷேகம் செய்ய வேண்டும் என்பது சச்சினின் நீண்ட நாள் ஆசையாக இருந்தது. கணவனின் ஆசையை நிறைவேற்ற துணிந்த ஆஷா, சச்சினை தனது தோள்களில் தூக்கி சுமந்தபடி நடந்து செல்ல முடிவெடுத்தார்.

180 கி.மீ. தூர நடைப்பயணம்

தனது சொந்த ஊரிலிருந்து உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் வரை உள்ள 180 கிலோமீட்டர் கடினமான பாதையை ஆஷா தனது கணவரைத் தோளில் தூக்கியபடி பயணத்தை தொடங்கினார். இந்த நெடிய பயணத்தில் இவர்களது குட்டி குழந்தைகளும் பெற்றோருடன் இணைந்தே நடந்து வந்துள்ளனர். வழியெங்கும் இந்த பெண்ணின் உறுதியை கண்டு வியந்த பொதுமக்கள், அவர்களுக்கு உணவும் தண்ணீரும் வழங்கி உற்சாகப்படுத்தினர்.