தேசிய செய்திகள்

கேரளாவில் உணவு தேடி ரேஷன் கடையை சேதப்படுத்திய காட்டு யானை

'சக்ககொம்பன்' என்ற காட்டு யானை ரேஷன் கடையை சேதப்படுத்தியதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் உள்ள மலைப்பகுதி மாவட்டமான இடுக்கியில் ஆனையிரங்கல் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள ரேஷன் கடையில் இன்று காலை காட்டு யானை ஒன்று புகுந்து, பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை சேதப்படுத்தியுள்ளது.

இது சின்னக்கானல்-சாந்தன்பாறை பகுதிகளில் அடிக்கடி நடமாடக்கூடிய 'சக்ககொம்பன்' என்ற காட்டு யானை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். அதிகாலை சுமார் 5.30 மணியளவில் அந்த யானை ரேஷன் கடைக்குள் புகுந்து, அரிசி மூட்டைகளை வெளியே இழுத்துப் போட்டு சாப்பிட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பின்னர் அங்கிருந்தவர்கள் அந்த யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்டியுள்ளனர்.

இந்த ரேஷன் கடை பல ஆண்டுகளாக காட்டு யானைகளின் தாக்குதலுக்கு தொடர்ந்து இலக்காகி வருகிறது என வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றன. முன்னதாக 'அரிக்கொம்பன்' என்ற ஆண் யானை அடிக்கடி இந்தக் கடையை சேதப்படுத்தி வந்தது. அந்த யானை 2023-ல் பிடிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள காட்டுப் பகுதிக்குள் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.