திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மம்தா பானர்ஜிக்கு அடுத்த நிலையில் இரண்டாம் கட்ட தலைவராக உள்ள முகுல் ராய் சமீபத்தில் கட்சி துணை தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் கட்சியின் பணி குழுவில் இருந்து விலகுகிறேன் என இன்று அறிவித்த அவர், துர்கா பூஜைக்கு பின் மேலவை எம்.பி. பதவி மற்றும் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவி ஆகியவற்றில் இருந்து விலகுவேன் என்றும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், முகுல் ராய் பாரதீய ஜனதாவில் சேரலாம் என யூகங்கள் வெளியாகியுள்ளன.
இதனை தொடர்ந்து அக்கட்சியின் தேசிய பொது செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியா கூறும்பொழுது, எந்த முடிவையும் முகுல் ராய் சுதந்திரமான முறையில் எடுக்கலாம். அவரிடம் இருந்து எந்த ஒப்புதலும் எங்களுக்கு வரவில்லை. அவரிடமிருந்து ஏதேனும் ஒப்புதல் எங்களுக்கு வந்துவிட்டால் அதுபற்றி மாநில தலைவர்களிடம் ஆலோசனை செய்து முடிவு செய்வோம் என கூறியுள்ளார்.