தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் மதுபானங்களின் விலை மீண்டும் உயர்வு?

விலை உயர்வுக்கான அரசாணையும் நேற்று முன்தினம் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு அமைந்த பின்பு மதுபானங்களின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. 5 உத்தரவாத திட்டங்களுக்கு நிதி தேவைப்படுவதால் மதுபானங்களின் விலையை அரசு உயர்த்தியது. இதற்கு மதுப்பிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், 2026-27-ம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்-மந்திரி சித்தராமையா, நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடகத்தில் ஆல்கஹாலின் அளவை பொறுத்து (ஆல்கஹால் இன் பேவரேஜ்) மதுபானங்கள் மீது வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். பட்ஜெட்டில் அறிவித்தபடி ஆல்கஹாலின் அளவுக்கு ஏற்றார் போன்று வரி விதிக்கும் முறையை நடைமுறைப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணையும் நேற்று முன்தினம் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் மதுபானங்களின் விலை 20 சதவீதம் வரை அதிகரிக்ககூடும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக குறைவான விலை கொண்ட மதுபானங்களின் விலை உயர்த்தப்பட இருப்பதாக தெரிகிறது. 180 மில்லி அளவுள்ள மதுபானங்களின் விலை ரூ.80-ல் இருந்து ரூ.95-க்கு விற்கப்பட உள்ளது.

இதுதவிர ரூ.5 முதல் ரூ.10 வரை பிற மதுபானங்களின் விலை உயரலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. நாட்டிலேயே மதுபானங்களில் உள்ள 'ஆல்கஹால்' அளவை பொறுத்து வரி விதிக்கப்படுவது கர்நாடகத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.