புதுடெல்லி,
போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஐனஸ் பாரியா. இவர் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து, தனது பயண அனுபவங்களை சமூக வலைதளங்களில் வீடியோக்களாக பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் ஐனஸ் பாரியா, தனது இந்திய பயணத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில், சமீபத்தில் அவர் இருமல் மற்றும் சளி தொந்தரவுக்காக மருந்து கடைக்கு சென்று மாத்திரை, மருந்துகள் வாங்கிய வீடியோவை பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், அவர் ஒரு டானிக் பாட்டில் மற்றும் 3 அட்டை மாத்திரைகளை வாங்கியதாகவும், அதன் விலை ரூ.252 என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் வாங்கிய மருந்துகளுக்கு விலை அதிகமாக இருக்கும் என்று நினைத்ததாகவும், ஆனால் அதன் விலை சுமார் 2 யூரோ மட்டுமே என்பது தனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது என்றும் ஐனஸ் பாரியா கூறியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவைப் பார்த்து, இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் இந்த மருந்துகள் இலவசமாகவே கிடைக்கும் என்று பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.