புதுடெல்லி,
மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. பதிலுக்கு ஈரானும் திருப்பி தாக்குவதால் 12 நாட்களாக போர் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், வளைகுடா நாடுகளில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு வரும் சரக்கு கப்பல்களை ஈரான் தடுத்து நிறுத்தியது.
தட்டுப்பாடு ஏற்படுமா?
இதனால், உலக அளவில் பெரும்பாலான நாடுகளில், எரிவாயு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவானது. குறைந்த அளவே கையிருப்பு வைத்திருந்த நாடுகளில் அதன் தாக்கம் உடனடியாக எதிரொலிக்க தொடங்கியது.
அந்த வகையில், மக்கள் வளம் அதிகம் கொண்ட இந்தியாவில், எரிவாயு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சமும் நாட்டு மக்கள் மத்தியில் எழுந்தது.
85 சதவீதம் இறக்குமதி
இந்தியாவில், பெட்ரோல், டீசலுக்கு மூலப்பொருளான கச்சா எண்ணெய் உற்பத்தி நாளொன்றுக்கு 1.06 மில்லியன் பீப்பாய்கள் என்ற அளவில் உள்ளது. வெளிநாடுகளில் இருந்தும் நாளொன்றுக்கு 5.96 மில்லியன் பீப்பாய்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
அதாவது, இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதம் இறக்குமதி செய்தே சமாளித்து வருகிறது. என்றாலும், 50 முதல் 75 நாட்கள் வரைக்கு தேவையான எரிபொருளை எப்போதும் கையிருப்பில் வைத்திருக்கும் நடைமுறை இருந்து வருகிறது.
இதுகுறித்து, பெட்ரோலியத் துறை இணை மந்திரி சுஜாதா சர்மா கூறியதாவது:-
தட்டுப்பாடு இல்லாமல் வருகை
எல்.என்.ஜி. எனப்படும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு உடன் 2 சரக்கு கப்பல்கள் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. தட்டுப்பாடு இல்லாமல் நமக்கு எரிவாயு வருகிறது. எனவே, சமையல் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படாது. மக்கள் பீதியடைய வேண்டாம். கச்சா எண்ணெய் விநியோகமும் பாதுகாப்பான முறையில் நடந்து வருகிறது.
வழக்கத்தைவிட கூடுதலாகவே பெட்ரோலியப் பொருட்கள் நம் நாட்டுக்கு வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி மட்டுமின்றி பல மார்க்கமாக நமக்கு கச்சா எண்ணெய் சரக்கு கப்பல்களில் வந்து கொண்டிருக்கின்றன. வழக்கமாக ஹார்மூஸ் வழியாக 55 சதவீத கச்சா எண்ணெய் கப்பல்கள் வரும். ஆனால், போர் பதற்றத்திற்கு பிறகு, பல மார்க்கங்கள் வழியாக 75 சதவீதம் அளவுக்கு கச்சா எண்ணெய் வந்து கொண்டிருக்கிறது. இது வழக்கத்தைவிட கூடுதல் ஆகும்.
கூடுதல் உற்பத்தி
வீடுகளுக்கான சமையல் கியாஸ் சிலிண்டர் காத்திருப்பு, வழக்கம் போலவே 2½ நாள் தான். எனவே, நுகர்வோர் முண்டியடித்துக் கொண்டு பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நம் எண்ணெய் சுத்திரிகரிப்பு நிலையங்களும் முன்பைவிட கூடுதலாக உற்பத்தியை அதிகரித்து வருகின்றன.
100 சதவீதத்திற்கு மேலாக தற்போது உற்பத்தி நடந்து வருகிறது. நம் நாட்டில், ஒரு நாளைக்கான எரிவாயு நுகர்வு 189 மில்லியன் மெட்ரிக் தர கியூபிக் மீட்டர்கள். அதில் 97.5 மில்லியன் மெட்ரிக் தர கியூபிக் மீட்டர்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. எஞ்சிய தேவைக்கு மட்டுமே இறக்குமதி செய்து வருகிறோம்.
தவிர்க்க முடியாத காரணங்களால் 47.4 மில்லியன் மெட்ரிக் தர கியூபிக் மீட்டர்கள் எரிவாயு வினியோகத்தில் தடை ஏற்பட்டது. அதுவும் தற்காலிகமானது தான். ஏனெனில் நாம் மாற்றுப்பாதையில் கொள்முதல் செய்ய ஆரம்பித்துவிட்டோம். நமக்கான தேவையில் 60 சதவீதத்தை இறக்குமதி செய்கிறோம்.
அரசு அறிவுறுத்தல்
தவிர, உள்நாட்டு எல்.பி.ஜி., உற்பத்தியை 25 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளோம். அதற்கான முன்னுரிமையை வீட்டு உபயோக நுகர்வோருக்கு வழங்கும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.