தேசிய செய்திகள்

மாமியாரை செங்கலால் அடித்துக்கொன்ற இளம்பெண் - அதிர்ச்சி சம்பவம்

மாமியாரை செங்கலால் அடித்துக்கொன்ற பிரஜோத் கவுரை போலீசார் கைது செய்தனர்.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டம் முகிலினா கிராமத்தை சேர்ந்தவர் ஹர்தீப் சிங். இவரது மனைவி பிரஜோத் கவுர் (வயது 27). ஹர்தீப் சிங்கின் தாயார் நிர்மலா கவுர். 3 பேரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

இதனிடையே, பிரஜோத் கவுருக்கும் அவரது மாமியார் நிர்மலா கவுருக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு, வாக்குவாதம் நிலவி வந்தது. அதேவேளை, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 14ம் தேதி ஹர்தீப் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது பிரஜோத் கவுரும், அவரது மாமியார் நிர்மலா கவுரும் வீட்டில் இருந்துள்ளனர்.

செங்கலால் அடித்துக்கொலை

இந்நிலையில், வீட்டில் இருந்த மாமியாருக்கும், பிரஜோத் கவுருக்கும் இடையே 14ம் தேதி இரவு மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பிரஜோத் கவுர் வீட்டில் இருந்த செங்கலால் மாமியார் நிர்மலா கவுரை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் வீட்டிலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த நிர்மலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ஹர்தீப் சிங் வீடு திரும்பிய நிலையில் அங்கு தனது தாயார் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், மாமியாரை செங்கலால் அடித்துக்கொன்ற மருமகள் பிரஜோத் கவுரை கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.