ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் ஜெகத்புரா பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு பொறியாளர் திலீப் குமார். இவரது மனைவி ஊர்மிளா கவூர் (வயது 55). இந்த தம்பதிக்கு அங்கித் என்ற மகன் உள்ளார். திலீப் குமார் ஜெகத்புராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 8வது மாடியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இதனிடையே, பணியின்போது லஞ்சம் பெற்றதாகவும் , ஊழலில் ஈடுபட்டதாகவும் சமீபத்தில் திலீப் குமாரை ராஜஸ்தான் மாநில லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், ஊர்மிளா கவூர் இன்று அடுக்குமாடி குடியிருப்பில் 8வது மாடியில் உள்ள வீட்டின் பால்கனி பகுதியில் நின்றுகொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக ஊர்மிளா 8வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த ஊர்மிளாவை மீட்ட குடியிருப்புவாசிகள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் ஊர்மிளாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.